
இந்திய பங்குச்சந்தைகள் 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடர்ந்து சரிந்து வருகிறது. சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் கிட்டதட்ட 10 சதவிகிதத்துக்கு மேல் வீழ்ச்சி அடைந்து விட்டன. இந்த வீழ்ச்சி இனிவரும் நாட்களிலும் தொடரும் என முதலீட்டு நிபுணர்கள் பலரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டை இப்போது தொடங்கலாமா?
முதலீட்டாளர்கள் இப்போது முதலீட்டை தைரியமாக தொடங்கலாம். ஏனெனில் இப்போது பங்குச்சந்தைகள் பெரும் வீழ்ச்சியில் இருக்கும் நிலையில், முதலீட்டை தொடங்கினால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
முதலீட்டில் எப்போதுமே குறைந்த விலையில் கிடைக்கும் போது வாங்குவது சிறந்ததாக இருக்கும். இதற்கு முன்பு 2008ம் ஆண்டில் பங்குச்சந்தை வீழ்ச்சியிலிருந்து மீண்ட போது, முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது. All time high – லிருந்து ஷேர்மார்க்கெட் தற்போது சரிந்துள்ளது.
இப்போது பங்குச்சந்தை முதலீட்டை விட மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சிறந்ததாக இருக்கும். ஏனெனில் பங்குச்சந்தையில் எந்த பங்கை வாங்க வேண்டும் அதனுடைய செயல்பாடுகள் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை முதலீட்டாளர்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்த சிக்கல்கள் மியூச்சுவல் ஃபண்டில் இருக்காது. ஏனெனில் இதில் ஃபண்ட் மேனேஜர்கள் நீங்கள் முதலீடு செய்யும் தொகையில் எந்தவகையான முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்தால் சிறப்பாக இருக்கும் என ஆய்வு செய்து முதலீடு செய்வார்கள்.
எனவே மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ் ஐ பி முறையில் முதலீட்டை தொடங்கலாம். ஒருவேளை நீங்கள் மொத்தமாக பணம் வைத்திருந்தாலும், அதை கொஞ்சம் கொஞ்சமாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும். ஏனெனில் பங்குச்சந்தைகள் இன்னும் வீழ்ச்சி அடையும் என கூறப்படுகிறது. அதனால் முதலீட்டாளர்கள் தங்கள் கையில் இருக்கும் பணத்தை மொத்தமாக இல்லாமல் எஸ் ஐ பி முறையில் முதலீடு செய்து, நல்ல வருமானத்தைப் பார்க்கலாம்.